Toronto காவல்துறை அதிகாரிகள் மூவர் Barcelona-வில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
பணியில் இல்லாத மூன்று அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட “கடுமையான” குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக Toronto காவல்துறை (Toronto Police Service – TPS) தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அதிகாரிகள் அந்த நேரத்தில் Spain-னில் விடுமுறையில் இருந்ததாகவும், அவர்கள் எந்த ஒரு அதிகாரப்பூர்வப் பணிக்காகவும் பயணிக்கவில்லை எனவும் TPS செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என அவர் குறிப்பிட்டார்.
விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஒரு பாலியல் தொழிலாளி காயப்படுத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
Spain-னின் Catalonia காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், கனடிய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையில் திங்கட்கிழமை இந்த விவரங்களை வழங்கினார்.
கடந்த வாரம் இந்த சம்பவம் ஒரு வாடகை வாகனத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மூவரும் May 15 அன்று கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் ஒரு காவல்துறை அதிகாரி கனடா திரும்பியவுடன், சமூகப் பாதுகாப்பு, காவல் சட்டத்தின் படி, காவல்துறைத் தலைவரின் அதிகாரத்தின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய இரண்டு அதிகாரிகளும் எதிர்வரும் நாட்களில் கனடா திரும்பியதும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் TPS செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்த விபரங்கள், குற்றச்சாட்டுகள் வெளியிடப்படவில்லை.
இதில் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அதிகாரிகளின் அடையாளங்களை வெளியிடவில்லை என Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.
Toronto காவல்துறை சங்கம் (Toronto Police Association -TPA) தமது மூன்று உறுப்பினர்கள் தொடர்பான சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகக் கூறிய போதிலும், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகள் பணி இல்லாத நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானவை என்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கவில்லை என TPA கூறியது.
இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
