Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் தேர்தலில் போட்டியிட தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் 1-ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இதில் பாடசாலை வாரிய அறங்காவலர் பதவிக்கான தேர்தலும் அடங்குகிறது.
Toronto பாடசாலை வாரியத்தின் 11-ஆவது தொகுதியில் தமிழரான ரவிச்சா ரவிந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
Toronto நகர பாடசாலை வாரியம் இம்முறை 12 புதிய அறங்காவலர் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தற்போது உள்ள 22 அறங்காவலர் தொகுதிகளுக்கு பதிலாக, 12 தொகுதிகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி முறைகேட்டை காரணம் காட்டி, Ontario பாடசாலை வாரியத்தை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்த Doug Ford அரசாங்கம், தற்போதைய 22 Toronto கல்விச் சபை அறங்காவலர்களை இடைநீக்கம் செய்தது.
இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டதில் தமிழர்களும் அடங்குகின்றனர்.
கடந்த நகரசபை தேர்தலில் Toronto கல்விச் சபை அறங்காவலர் பதவிக்கு மூன்று தமிழர்கள் தெரிவாகினர்.
நீதன் சான் (Scarborough Center), யாழினி ராஜகுலசிங்கம் (Scarborough North), அனு ஸ்ரீஸ்கந்தராஜா (Scarborough-Agincourt) ஆகியோர் கடந்த தேர்தலில் கல்விச் சபை அறங்காவலர் உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
இவர்களில் நீதன் சான் மீண்டும் Toronto நகரசபை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
கடந்த October மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் நீதன் சான் வெற்றி பெற்று Scarborough-Rouge Park தொகுதியின் நகர சபை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
