தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – அதிக பணவீக்கம் குறித்து எச்சரிக்கும் மத்திய வங்கி

அதிக பணவீக்கம் குறித்து எச்சரித்துள்ள கனடிய மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை.

தனது முக்கிய கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து நான்காவது முறையாக தனது முக்கிய கொள்கை வட்டி விகிதத்தில் மத்திய வங்கி மாற்றம் எதையும் அறிவிக்கவில்லை.

அதேவேளை குறுகிய காலத்திற்கு பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் மத்திய வங்கி  எச்சரித்துள்ளது.

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவித்தல் புதன்கிழமை (29) வெளியானது.

எதிர்பார்த்தபடியே தனது முக்கிய வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக தக்க வைத்துக் கொண்ட மத்திய வங்கி, பொருளாதாரம் குறித்த அதன் கணிப்புகள் உண்மையானால், வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் சிறியதாகவே இருக்கும் எனவும் கூறியது.

இதுவரை அதிகரித்த எரிபொருள் விலைகள் ஏனைய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறிய வங்கியின் ஆளுநர் Tiff Macklem, பணவீக்கம் குறித்த நீண்ட கால எதிர்பார்ப்புகள் மாறவில்லை எனவும் கூறினார்.

ஆனாலும் ஈரான் யுத்தம் , அமெரிக்க வரிகளினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை காரணம் காட்டிய அவர், எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து அது பணவீக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்தால், மத்திய வங்கி தொடர்ச்சியான வட்டி விகித அதிகரிப்புகள் மூலம் பதிலளிக்க நேரிடலாம் எனவும் தெரிவித்தார்.

ஈரான் போரின் ஒட்டுமொத்தத் தாக்கம் கனடாவின் மீது மிதமானதாகவே இருக்கும் எனவும் மத்திய வங்கி குறிப்பிடுகிறது.

January மாதத்தின் பின்னர் வெளியிட்ட தனது முதல் பணவியல் கொள்கை அறிக்கையில் (MPR), April மாதத்தில் பணவீக்கம் சுமார் மூன்று சதவிகிதம் உச்சத்தை எட்டும் என மத்திய வங்கி கணித்துள்ளது.

March மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், April மாதத்தில் சுமார் 3 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், இந்த ஆண்டிற்கான சராசரி பணவீக்கம் சுமார் 2.3 சதவீதமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது

பின்னர் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் அதன் இரண்டு சதவிகித இலக்கிற்கு பணவீக்கம் குறையும் எனவும் மத்திய வங்கி அறிவித்தது.

கனடிய மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித முடிவு June 10-ஆம் திகதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

NATO பாதுகாப்புச் செலவின இலக்கை எட்டியது கனடா

Lankathas Pathmanathan

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

thesiyam

கனேடிய ஆயுதப்படைக்கு அதிகமான பணியாளர்களை ஈர்க்க வேண்டிய தேவை உள்ளது: பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

Leave a Comment