Ajax நகர இல்லத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
Ajax இல்லம் ஒன்றில் திருட்டு நடந்ததாக விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து அங்கு சென்ற Durham காவல்துறையினர் “கடுமையான காயங்களுடன்” ஒருவரை கண்டெடுத்தனர்.
குறிப்பிட்ட இல்லத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டவர் உயிர்காக்கும் நடவடிக்கைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியானவர் காவல்துறையினரால் அடையாளம் காணப்படாத போதிலும் அவரை சஞ்சுலா பெரேரா என நண்பர்களும் உறவினர்களும் அடையாளப்படுத்தினர்.
இவர் இந்த ஆண்டில் Durham பிராந்தியத்தில் நிகழ்ந்த இரண்டாவது கொலைக்கு பலியானவர் ஆவார்.
இவரது மரணத்திற்கு காரணமான கடுமையான காயங்களை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து காவல்துறை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவைத் தாண்டி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றடைய முன்னர், இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்தது.
புலனாய்வாளர்கள் இந்தச் சம்பவத்தை ஒரு “குறிவைக்கப்பட்ட” தாக்குதல் என கூறுகின்றனர்.
இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருப்பதாக தாங்கள் நம்பவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
