கியூபாவிற்கு 8 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது கியூபாவில் அமெரிக்காவின் எரிபொருள் முற்றுகை தொடரும் நிலையில் இந்த உதவி திட்டம் புதன்கிழமை (24) அறிவிக்கப்பட்டது.
கியூப மக்களுக்கு கனடா 8 மில்லியன் டொலர் உணவு உதவியை அனுப்புகிறது என கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்தார்.
அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி வழங்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், சர்வதேச மேம்பாட்டுக்கான வெளியுறவுச் செயலாளர் Randeep Sarai ஆகியோர் தெரிவித்தனர்.
கியூபாவுக்கான தனது தற்போதைய ஆதரவிற்கு மேலதிகமாக 8 மில்லியன் டொலர்களை கனடா அனுப்புகிறது என Randeep Sarai தெரிவித்தார்.
இந்த நிதி கியூப அரசாங்கத்திற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் முகமையாளர்கள் மூலம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கியூபாவின் பெரும்பகுதியில் “உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறை” குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கனடிய பயணிகளுக்கு கனடிய வெளிவிவகார அமைச்சு எச்சரித்து வருகிறது.
கியூபாவிற்கு உதவி வழங்குவது குறித்து வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் அமெரிக்க சகாக்களுடன் பேசியுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
அமெரிக்காவின் எண்ணெய் முற்றுகையின் காரணமாக, பல வாரங்களாக, கியூபாவின் பல பகுதிகளில் அடிப்படைத் தேவைகள் சவாலாகி வருகின்றது.
January மாதம் Venezuela-வின் எண்ணெய் இருப்புக்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, Cuba அதன் முக்கிய எரிபொருள் விநியோகத்தை இழந்தது.
அதன் பின்னர் கியூபாவிற்கு எரிபொருளை அனுப்பும் நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அச்சுறுத்தி வருகிறார்.
பொருளாதார அழுத்தம் கியூபாவின் கம்யூனிச ஆட்சியை கவிழ்க்க கூடும் என அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனாலும் கியூப அரசாங்கம் நிலையானது என கனடிய அதிகாரி ஒருவர் செவ்வாய்கிழமை நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருந்தார்.
கியூபாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு கனடிய மத்திய அரசு தற்போது அறிவுறுத்தி வருகிறது.
அனைத்து கனடிய விமான நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை கியூபாவிற்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி …..
