ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய கனடா 10 மில்லியன் யூரோக்களை செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் இணைய கனடா 10 மில்லியன் யூரோக்களை – $16 மில்லியன் கனடியன் – செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் எவ்வளவு முதலீட்டை உருவாக்கும் என்பது குறித்த கேள்விகள் எழும் நிலையில் இந்த தகவல் வெளியானது.
இந்த வாரம் கனடா அதிகாரப்பூர்வமாக $245 பில்லியன் மதிப்புள்ள ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கை திட்டமான SAFE-இல் இணைந்தது.
இது அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம், நிதியுதவியை நம்பியிருக்கும் நிலையைக் குறைக்கும் ReArm ஐரோப்பா முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty திங்கட்கிழமை (01) அறிவித்தார்.
ஆனாலும் கனடாவின் நிதி பங்களிப்பு குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் Brussels-சில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கனடாவின் நிதி பங்களிப்பு குறித்த விபரத்தை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் Thomas Regnier செவ்வாய்கிழமை (02) வெளியிட்டார்.
“ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டத்திற்கு கனடா 10 மில்லியன் யூரோக்களை ஒரு முறை பங்களிப்பாக செலுத்த வேண்டும் என தெரிவித்த Thomas Regnier, பின்னர் இந்த தொகை மறு மதிப்பீடு செய்யப்படும் என கூறினார்.
கனடாவின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை (03) ஒரு அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது.
கொள்கையளவில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக தொழில்நுட்ப விவாதங்கள் தொடர்வதாக தெரிவித்தார்.
கனடா 2.5 மில்லியன் யூரோ முன்பண நிர்வாக பங்களிப்பையும், 7.5 மில்லியன் யூரோ முன்பண வருடாந்திர பங்கேற்பு பங்களிப்பையும் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கனடாவின் பாதுகாப்பு தொழில்நுட்பம், தொழில்துறை திறன் குறித்து ஐரோப்பாவில் ஆதரவான நிலைப்பாடு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
LJI Reporter ரம்யா சேது
