Ontario மாகாணத்தின் Brampton நகரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
வியாழக்கிழமை (20) அதிகாலை வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதில் வீட்டில் வசித்த மூன்று பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே இருவர் இறந்துவிட்டதாகவும், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரும் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பல தலைமுறைகளை கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அந்த வீட்டிற்குள் வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மூன்று நபர்களும் அடங்குகின்றனர்.
காணாமல் போன மூன்று பேரில் ஒருவர் குழந்தையாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இரண்டு நபர்கள் இந்த இல்லத்தின் அடித்தள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தின் போது அருகிலுள்ள வீடுகளும் சேதமடைந்தன.
ஆனால் அந்த குடியிருப்புகளில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்கு பேரும் எரியும் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக வியாழன் பிற்பகல் சம்பவ இடத்தில் ஊடகங்களிடம் பேசிய Brampton நகர முதல்வர் Patrick Brown கூறினார்.
இந்த வீட்டின் உரிமையாளர் நீண்ட காலமாக நாட்டிற்கு வெளியே இருப்பதாகவும் Patrick Brown கூறினார்.
நாட்டிற்கு வெளியே வசிக்கும் வீட்டு உரிமையாளர், 2019-ஆம் ஆண்டிலேயே அடித்தளத்தில் இரண்டாவது குடியிருப்பை உருவாக்க கட்டிட அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.
ஆனாலும் இந்த வீட்டில் புதுப்பித்தல் பணிகளை ஆய்வு செய்ய, Brampton நகர கட்டிட அதிகாரிகளுக்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் Patrick Brown தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
LJI Reporter ரம்யா சேது
