கனடிய தபால் ஊழியர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என வியாழக்கிழமை (25) அறிவிக்கப்பட்டது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளுக்கான தபால் விநியோகத்தை நிறுத்தும் முடிவை மத்திய அரசாங்கம் இந்த வாரம் அறிவித்தது.
இந்த அறிவித்தல் வெளியான சில மணி நேரத்தில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் தபால் ஊழியர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
தபால் சேவையையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக இந்த உடனடி வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தபால் ஊழியர்கள் சங்கம் வியாழன் மாலை அறிவித்தது.
இந்த நிலையில் வேலை நிறுத்தம் நீடிக்கும் வரை புதிய கடிதங்கள், பொதிகள் ஏற்றுக் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், சில தபால் அலுவலகங்கள் மூடப்படும் எனவும் கனடா தபால் சேவை பேச்சாளர் தெரிவித்தார்.
அரசாங்க நலத் தொகை காசோலைகள் உட்பட சில சேவைகள் மாத்திரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் அண்மிக்கும் விடுமுறை கால விநியோகத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என சிறு தொழில் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் சிறு தொழில்களுக்கு மாத்திரம் $1 பில்லியனுக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
