பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா முடிவு செய்துள்ளது.
கனடிய பிரதமர் Mark Carney புதன்கிழமை (30) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
September மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் இணைந்து Mark Carney இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
காசாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதத்தை “சர்வதேச சட்ட மீறல்” என Mark Carney அண்மையில் விமர்சித்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Conservative கட்சி இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் அதேவேளை, NDP அதை வரவேற்கிறது.
வன்முறையும் பயங்கரவாதமும் அரசியல் நோக்கங்களை அடைவதற்கான கருவிகளாக பயன்படுத்தப்படலாம் என்ற தவறான செய்தியை இந்த அறிவித்தல் முன்வைக்கிறது என Conservative கட்சி குற்றம் சாட்டியது.
இதை வரவேற்கத்தக்க முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ள NDP, கனடா-இஸ்ரேல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்தி, ஆயுதத் தடையை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.
ஆனாலும் கனடாவின் இந்த முடிவை நிராகரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை கனடா ஆதரிப்பதை தனது நாடு நிராகரிப்பதாக இஸ்ரேலிய தூதர் Iddo Moed ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம் காசாவில் போர் நிறுத்தம் நோக்கிய முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
