Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இரண்டாவது தமிழர் தாக்கல் செய்துள்ளார்.
Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஆரணி முருகானந்தன் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (15) அவர் வேட்புமனு தாக்கல் செய்ததை அவரது பிரச்சார அலுவலகம் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் உறுதிப்படுத்தியது.
இவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்ற செய்தியை July 7-ஆம் திகதி தேசியம் வெளியிட்டிருந்தது.
அண்மையில் இந்த இடைத் தேர்தல் தொடர்பாக நகர சபையில் நடைபெற்ற விவாதத்தில் பொதுமக்கள் சார்பாக இடைத் தேர்தலை ஆதரித்து ஆரணி முருகானந்தன் வாதங்களை முன்வைத்திருந்தார் என அவரது பிரச்சார அலுவலக செய்தி குறிப்பு கூறுகிறது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு June 30-ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் நாள் தமிழரான கிள்ளி செல்லையா முதலாவது வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.
