அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது என கனடிய பிரதமர் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயத்தில் கனடாவின் நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-உடன் தொலைபேசியில் உரையாடினார்.
மத்திய கிழக்கில் மோதலைத் தணிப்பதன் அவசியத்தை இந்த உரையாடல் மையப்படுத்தியதாக பிரதமர் ஒரு சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டார்.
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை (22) அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என கனடிய பிரதமர் குறிப்பிட்டார்.
ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தணிக்க அமெரிக்க இராணுவ நடவடிக்கை “வடிவமைக்கப்பட்டது” என குறிப்பிட்ட கனடிய பிரதமர், ஆனாலும் மத்திய கிழக்கில் நிலைமை “மிகவும் கொந்தளிப்பாக” உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில் ‘மிகவும் கொந்தளிப்பான’ மத்திய கிழக்கில் ‘ஸ்திரத்தன்மைக்கு’ Mark Carney அழைப்பு விடுத்தார்.
இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி இராஜதந்திர தீர்வை எட்டுமாறு கனடா அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
