இலங்கையில் உள்ள தமிழ் ஊடகர்கள் தொடர்பில் கனடாவின் கரிசனை தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh, அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை இந்த வாரம் சந்தித்தார்.
கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் புதன்கிழமை (30) இந்த சந்திப்பு நடைபெற்றது.
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தே .செந்தில்வேலவர் தலைமையில் நிர்வாக குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்
இந்த சந்திப்பின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் உட்பட பல விடயங்கள் கனடிய தூதுவரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாக அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்தது.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தமிழ் ஊடகர் படுகொலைகள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என இந்த சந்திப்பில் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது.
இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் Eric Walsh-இடம் கோரியுள்ளது
கடந்த காலங்களில் தமிழ் ஊடகர்கள் படுகொலை செய்யப்பட்டமை , அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை இதுவரை இடம்பெறாமை குறித்து இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டிய ஒன்றிய உறுப்பினர்கள், அவற்றுக்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதுடன் அதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் வழங்கவேண்டுமென வலியுறுத்தினர்.
தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களது தொழிலை செய்யும் போது அரசியல் உட்பட்ட பல்வேறு தரப்புகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் , புதிய ஆட்சியின் கீழும் இந்த நிலைமை தொடர்வதையும் தூதுவரிடம் சுட்டிக்காட்டிய ஒன்றிய உறுப்பினர்கள் , மறைமுகமான சுய செய்தித் தணிக்கைக்கு ஊடகர்கள் பணிக்கப்படுகிறார்கள் எனவும் விபரித்தனர்.
இலங்கையில் உள்ள தமிழ் ஊடகர்கள் தொடர்பில் கனடாவின் கரிசனை தொடரும் என அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் Eric Walsh உறுதியளித்தார்.
தமிழ் ஊடகர்களின் தொழில் பயிற்சிக்கு கனடிய அரசு இயன்றவரை உதவுமெனவும் இந்த சந்திப்பில் அவர் உறுதியளித்தார்.
