பொதுத் தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் விவாதங்களில் பங்கேற்பதற்கான பசுமைக் கட்சிக்கான அழைப்பு மீளப்பெறப்பட்டது.
பொதுத் தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் ஆங்கிலம், பிரெஞ்சு மொழி உத்தியோகபூர்வ விவாதங்கள் புதன் (16) , வியாழக்கிழமைகளில் (17) நடைபெறுகின்றன.
தலைவர்கள் விவாத ஆணையம் என்ற சுயாதீன அமைப்பு நடத்தும் இந்த கட்சி தலைவர்களின் விவாதங்களில் இம்முறை ஐந்து முன்னணி அரசியல் கட்சிகள் பங்கேற்க இருந்தன.
Liberal தலைவர் Mark Carney, Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet , பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் Jonathan Pedneault ஆகியோர் இந்த விவாதங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனாலும் கட்சி தலைவர்களின் விவாதங்களில் பங்கேற்க பசுமைக் கட்சிக்கு விடுத்த அழைப்பை இரத்து செய்துள்ளதாக தலைவர்களின் விவாத ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு மொழி விவாதம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும், ஆங்கில விவாதத்திற்கு ஒரு நாள் முன்னதாகவும் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பசுமைக் கட்சி வேண்டுமென்றே குறைத்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் கூறுகிறது.
இந்த விவாதங்களில் பங்கேற்க, கட்சிகள் மூன்று நிபந்தனைகளில் இரண்டை பூர்த்தி செய்ய வேண்டும் என தலைவர்கள் விவாத ஆணையம் தெரிவித்திருந்தது.
விவாத ஆணையம் நிர்ணயித்த காலக்கெடுவின் படி, பசுமைக் கட்சி இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்களின் விவாதங்களில் பங்கேற்பதற்கான பசுமைக் கட்சிக்கான அழைப்பு மீளப்பெறப்பட்டது.
