தேசியம்
செய்திகள்

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளின் பேரில் கனடாவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் சிறப்பு பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக கனடா இந்த தடை விதித்தது.

கனடா விதித்த இந்த தடைகள் குறித்து இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகரிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கைக்கான கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர், புதன்கிழமை (11) இலங்கை வௌிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தத் தடை தொடர்பில் வினவுவதற்காக இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் Daniel Boodடை புதனன்று வௌிவிவகார அமைச்சுக்கு அழைத்திருந்தார்.

கனடிய அரசாங்கத்தின் தடை நகர்வை ஒருதலைப்பட்சமான முடிவு என அலி சப்ரி விமர்சித்தார்.

இந்த சந்திப்பில் கனேடிய பதில் உயர்ஸ்தானிகரிடம் இலங்கை அரசாங்கம் சார்பில் கவலையை தெரிவித்ததாக வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை முடிவு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது என இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத்தீ காரணமாக Torontoவின் காற்றின் தரம் உலகிலேயே மோசமானதாக உள்ளது!

Lankathas Pathmanathan

“அவமானத்தின் அடையாளம்”: பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கனடாவின் முடிவை இஸ்ரேல் விமர்சனம்!

Lankathas Pathmanathan

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja

Leave a Comment