தேசியம்
இலங்கதாஸ் பத்மநாதன் கட்டுரைகள்

நெறிமுறை விதிகளை மீறிய விஜய் தணிகாசலம் மன்னிப்பு கோரினார்!

Scarborough Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் நெறிமுறை விதிகளை மீறினார் என Ontarioவின் நேர்மை ஆணையர் (Integrity Commissioner of Ontario) J. David Wake கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தக் கண்டனம் வெளியானது. தனது தொகுதி அலுவலகத்தை பாகுபாடான நோக்கங்களுக்காக பயன்படுத்தியதன் மூலம் மாகாணசபை நெறிமுறை விதிகளை மீறினார் என நேர்மை ஆணையர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி

NDPயின் நெறிமுறை விமர்சகர் Taras Natyshak முன்வைத்த புகாரைத் தொடர்ந்து விஜய் தணிகாசலம், மாகாணசபை உறுப்பினர்களின் நேர்மைச் சட்டத்தை மீறினாரா என்பது குறித்து நேர்மை ஆணையர் Wake விசாரணை ஒன்றை ஆரம்பித்தார்.

Scarborough Guildwood தொகுதியின் Progressive Conservative கட்சியின் வேட்பாளரான போட்டியிடும் Alicia Viangaவை விளம்பரப்படுத்த விஜய் தணிகாசலம் தொகுதி வளங்களை  தவறாகப் பயன்படுத்தினார் என்பதே குற்றச் சாட்டாகும்.

கடந்த April மாதம் விஜய் தணிகாசலமும் அவரது PC கட்சியின் Scarborough மாகாணசபை உறுப்பினர்களும் (Christina Mitas, Raymond Cho, Aris Babikian) COVID தடுப்பூசிகள் குறித்து பேச ஒரு மெய்நிகர் நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில் Mitas, Viangaவை எங்கள் வேட்பாளர் என அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு விஜய் தணிகாசலத்தின் மாகாணசபை உறுப்பினர் மின்னஞ்சலிலில் இருந்து நன்றி கடிதங்கள் அனுப்பப்பட்டன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு இணையாக Viangaவுக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒரு நிகழ்வைத் திட்டமிட விஜய் தணிகாசலம் தனது பதிவியை  பயன்படுத்தியதாக Natyshak கூறுகிறார்.

அதன் மூலம் அவரது (Vianga) பாகுபாடான பிரச்சாரத்தை விஜய் தணிகாசலம் ஊக்குவித்தார் என்பது குற்றச்சாட்டாகும். நிகழ்வுக்கான நோக்கத்திற்கு மேலாக கட்சி அரசியலை முன்னிலைப்படுத்த விஜய் தணிகாசலம் முனைந்தார் எனவும் Natyshakகின் பிரமாண வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டது.

நேர்மை ஆணையரின் முடிவு

இந்த நிகழ்வை பொறுத்தவரை விஜய் தணிகாசலம் தனது மாகாணசபை நெறிமுறை விதிகளை மீறினார் என நேர்மை ஆணையர் Wake தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டார். ஆனால் விஜய் தணிகாசலத்தின் அலுவலக ஊழியர்கள் இதற்கான பெரும்பாலான பழிகளை ஏற்றுக் கொண்டனர். இருந்தாலும் விஜய் தணிகாசலம் தனது ஊழியர்களின் தவறுகளுக்குப் பொறுப்பானவர் என்பது  நேர்மை ஆணையர் Wakeகின் இறுதி முடிவாகும்.

ஏனெனில் அவர் தனது ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கவில்லை, அவர்களது கடமைகளை மேற்பார்வை செய்யவில்லை என  நேர்மை ஆணையர் Wake தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கோரும் விஜய் தணிகாசலம்

இந்த விடயம் குறித்து அவரது தரப்பு கருத்துக்காக தேசியம் விஜய் தணிகாசலத்தை தொடர்பு  கொண்டது.  நேர்மை ஆணையரின் கண்டுபிடிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என மின்னஞ்சல் மூலம் தேசியத்திற்கு அவர் பதிலளித்தார். அதேவேளை இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என விஜய் தணிகாசலம் தெரிவித்தார். இனி இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கைகளையும் பயிற்சிகளையும் எடுத்துள்ளோம் எனவும் மின்னஞ்சல் பதிலில் அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

“I accept the Integrity Commissioner’s finding and apologize for the mistake. We have taken steps and trainings to ensure it never happens again.”

– Office of MPP Thanigasalam

இதற்காக விஜய் தணிகாசலம் எந்த தண்டனையையும் சந்திக்க மாட்டார். ஏனெனில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர், தனது ஊழியர்களுக்கு மாகாணசபை நெறிமுறை விதிகள் குறித்து பயிற்சி அளிக்க அவர் ஏற்பாடு செய்துள்ளார். இது எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்களைத் தடுக்கும் என நேர்மை ஆணையர் Wake குறிப்பிட்டார்.

100 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக, ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள், எதிர்கால வருங்கால வேட்பாளர்கள், ஊழியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும். வரி செலுத்துவோர்-நிதி வளங்கள், பாகுபாடான பிரச்சாரப் பணிகள் என்பன ஒன்றுடன் ஒன்று குறுக்கிடாமல் இருக்க ஒரு விரிவான பயிற்சி திட்டத்தை உருவாக்குங்கள் என்பது நேர்மை ஆணையர் Wake முன்வைக்கும் பரிந்துரையாகும்.

இலங்கதாஸ் பத்மநாதன் 

Related posts

அடுத்த தேர்தல் தொடர்பில் அமைச்சரவை மாற்றம் கூறுவதும் (கூறாததும்) என்ன?

Gaya Raja

அடுத்த தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைக்கும் வரவு செலவுத் திட்டம்!

Gaya Raja

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

Leave a Comment