May மாதத்தில் பணவீக்கம் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது,
அதிகரித்த எரிவாயு விலை இதற்கு காரணம் என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.
ஈரான் யுத்தம் காரணமாக தொடர்ந்து மூன்றாவது மாதமாக எரிவாயு விலை உயர்ந்து வருவதால், வருடாந்த பணவீக்க விகிதம் 2023-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக மூன்று சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது என புள்ளி விபரத் திணைக்களம் திங்கட்கிழமை (22) தெரிவித்தது.
April மாதத்தில் 2.8 சதவீதமாக இருந்த வருடாந்த பணவீக்க விகிதம், May மாதத்தில் 3.2 சதவீதமாக உயர்ந்து, பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்களால் Hormuz நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், கடந்த மாதம் எரிவாயு விலை ஆண்டுக்கு ஆண்டு 33.2 சதவீதம் உயர்ந்ததாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பால் விநியோகத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்ட June 2022-க்குப் பின்னர், நுகர்வோர் எரிபொருளுக்கு அதிகபட்ச விலையை கடந்த மாதம் செலுத்தினர் எனவும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறியது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் எரிபொருளின் விலை குறைந்துள்ளது.
July 15 அறிவிக்கப்படவுள்ள அடுத்த வட்டி விகித முடிவுக்கு முன்னர், கனடா வங்கி விலை தரவுகளை ஆய்வு செய்யும் கடைசி அறிக்கையாக May மாத பணவீக்க அறிக்கை அமைகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.
