கனடாவின் முதலாவது தேசிய இறையாண்மை செல்வ நிதியை பிரதமர் Mark Carney அறிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (28) வெளியாகவுள்ள வசந்த காலப் பொருளாதார அறிக்கைக்கு முன்னதாக இந்த அறிவித்தல் வெளியானது.
YouTube காணொளி ஒன்றில் இந்த முன்னெடுப்பை வெளியிட்ட பின்னர் திங்கட்கிழமை (27) காலை தலைநகர் Ottawa-வில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய அரசாங்கம் ஆரம்பத்தில் இந்த நிதிக்கு $25 பில்லியன் பங்களிக்கும் என அறிவிக்கப்பட்டது.
சொத்து மறுசுழற்சி, மறு முதலீடு மூலம் இது வளர்ச்சி பெற்று, எதிர்கால சந்ததியினருக்கு இன்னும் சிறந்த வாய்ப்புகளை இது உருவாக்கும் என Mark Carney அறிவித்தார்.
Mark Carney அரசாங்கத்தின் முதலாவது வசந்த காலப் பொருளாதார அறிக்கையை நிதியமைச்சர் Francois-Philippe Champagne செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“Canada Strong Fund” என பிரதமர் பெயரிடும் இந்தப் புதிய நிதி, வசந்த காலப் பொருளாதார அறிக்கை அறிவித்தலின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை நிதி அமைச்சரின் வசந்த காலப் பொருளாதார அறிக்கையில் கடந்த வருடம் November மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட பற்றாக்குறை குறைவாக இருக்கும் என அரசாங்க வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
கடந்த இலையுதிர்கால மத்திய வரவு செலவுத் திட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டில் $78 பில்லியன் பற்றாக்குறையையும், 2026-27 ஆம் ஆண்டில் $65 பில்லியன் ற்றாக்குறையையும் கணிக்கப்பட்டதுடன், 2029-30 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை $56.6 பில்லியன் ஆக குறையும் என எதிர்வு கூறப்பட்டது.
பற்றாக்குறையை $31 பில்லியனாக கட்டுப்படுத்த கோரி பிரதமருக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை Conservative தலைவர் Pierre Poilievre ஞாயிற்றுக்கிழமை (26) எழுதி இருந்தார்.
