ஈரான் போரில் கனடா பங்கேற்காதுஎன கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
Ottawa-வில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பாதுகாப்பு அமைச்சர் David McGuinty இந்தத் தகவலை தெரிவித்தார்.
இந்த யுத்தத்தில் கனடிய இராணுவத்தின் ஈடுபாட்டிற்கான சாத்தியத்தை பிரதமர் கடந்த வாரம் நிராகரிக்காத நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் இந்தக் கருத்து வெளியானது.
ஈரானால் தாக்கப்பட்ட பாரசீக வளைகுடா நாடுகளுக்கு உதவி வழங்குவதில் கனடா தனது NATO நட்பு நாடுகளுடன் இணைய இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அமைச்சர் David McGuinty கூறினார்.
ஈரானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என தெரிவித்த அவர் அங்குள்ள நிலையை கனடா ஆரம்பத்தில் இருந்தே அவதானித்து வருவதாக கூறினார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்ட நடவடிக்கைக்கு முன்னர் கனடாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதை கனடியர்கள் அறிந்து கொள்வது அவசியமானது எனவும் பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதில் கனடாவின் கருத்து கேட்கப்படவில்லை எனவும் கனடா இந்தத் தாக்குதலில் பங்கேற்கவில்லை எனவும் கூறிய அவர் கனடா இனியும் இந்த யுத்தத்தில் பங்கேற்காது என வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை (08) இரவு நடைபெற்ற அரசாங்கத்தின் பிரதான கூட்டம் குறித்த பிரதமர் அலுவலக சுருக்கத்தை அமைச்சரின் கருத்து எதிரொலித்தது.
இந்தக் கூட்டத்தில் தான் பங்கேற்றதை அமைச்சர் David McGuinty உறுதிப்படுத்தினார்.
