இலங்கைத்தீவில் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசங்கம் $1 மில்லியன் நிதி உதவியை அறிவித்துள்ளது.
Ditwah புயல் ஏற்படுத்திய வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ கனடிய அரசாங்கம் இந்த நிதி உதவியை அறிவித்தது.
கனடாவின் சர்வதேச மேம்பாட்டுக்கான வெளியுறவுச் செயலாளர் Randeep Sarai நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (04) இந்த உறுதிப்பாட்டை அறிவித்தார்.
நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது Pickering-Brooklin தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த Randeep Sarai இந்த நிதியுதவியை அறிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மனிதாபிமான கூட்டணிகள் மூலம் கனடா முதற்கட்டமாக $1 மில்லியன் மனிதாபிமான உதவியை வழங்கும் என்று சர்வதேச மேம்பாட்டுக்கான வெளியுறவுச் செயலாளர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிதியுதவி அவசரகால தங்குமிடம், சுத்தமான நீர், சுகாதார சேவைகள் உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிற அத்தியாவசிய உதவிகள் உள்ளிட்ட உயிர்காக்கும் உதவிகளை வழங்க உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்த Surrey மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Randeep Sarai, கனடிய அரசாங்கம், மேலும் தேவைகள் உருவாகும்போது தொடர்ந்து அவற்றை கவனத்தில் எடுக்கும் என கூறியுள்ளது.
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கும், களத்தில் உள்ள மனிதாபிமான சவால்களை எதிர்கொள்ள சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளோம் என கனடிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ditwah புயல் காரணமாக இலங்கையில் 500 பேர் வரை மரணமடைந்துள்ளதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
LJI Reporter ரம்யா சேது
