Ontario மாகாணத்தின் அனைத்து ஆசிரியர், கல்விப் பணியாளர் சங்கங்களுடனும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என கல்வி அமைச்சர் Paul Calandra நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மீண்டும் கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என கல்வி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்திற்கு பின்னர் பாடசாலைகள் “வழக்கம் போல்” திறக்கப்படும் என Paul Calandra உறுதியளித்தார்.
“நான் இன்னும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என Paul Calandra வியாழக்கிழமை (20) நடைபெற்ற வேறொரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பெரும்பாலான தொழிற்சங்கங்களுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், Ontario-வைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்விப் பணியாளர்களும் புதிய கூட்டு ஒப்பந்தங்கள் இல்லாமல் இன்னும் சில வாரங்களில் கல்வி ஆண்டை ஆரம்பிக்கவுள்ளனர்.
அரசாங்கத்துடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் தவறினால், வேலை நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும் வாய்ப்பு இன்னும் பரிசீலனையில் இருப்பதாக அந்தச் சங்கங்களின் தலைவர்கள் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்தனர்
Ontario ஆங்கிலக் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தை தவிர, ஏனைய அனைத்து சங்கங்களுடனும் மாகாண அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் சாத்தியமான வேலை நிறுத்தத்திற்காக பெற்றோர்கள் திட்டமிடத் தேவையில்லை என அமைச்சர் Paul Calandra கூறினார்.
