அமெரிக்காவின் கடுமையான இறக்குமதி வரிகள் அமுலுக்கு வருவதற்கு முன்னதாக, இரு தரப்பினரும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை என கனடிய பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (06) இந்தக் கருத்தை தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ள 50 சதவீத அளவில் கடுமையான இறக்குமதி வரிகள் எதிர்வரும் 19-ஆம் திகதி அமுலுக்கு வருவதற்கு முன்னதாக, கனடாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை என Mark Carney தெரிவித்தார்.
“முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் துறைகளை உள்ளடக்கிய, மிகவும் விரிவான மற்றும் உலகளாவிய அளவில் ஒப்பந்தத்தையே நாங்கள் விரும்புகிறோம்,” என வியாழனன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பெரும்பான்மையான கனடிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிப்பதாக கடந்த மாதம் Donald Trump உறுதியளித்தார்.
அந்த நடவடிக்கைகள் August 19-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது..
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது, கனடாவின் நலன்களுக்காக கனடிய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை குழு வாதாடி வருவதாக Mark Carney கூறினார்.
கனடா பேச்சுவார்த்தை குழு வியாழனன்று அமெரிக்க தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆக்கபூர்வமானதும் விரிவானதுமான சந்திப்பை நடத்தியதாக Mark Carney தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய வரி எச்சரிக்கையின் பின்னர், கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc அமெரிக்கத் தலைநகருக்கு மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.
கனடா ‘மோசமான தலைமைத்துவத்தை’ கொண்டுள்ளதாக Las Vegas நகரில் நடைபெற்ற பொருளாதாரக் கொள்கை தொடர்பான நிகழ்வு ஒன்றில் Donald Trump விமர்சித்த மறுநாளே, கனடிய பிரதமர் கருத்துகளும் இந்த சாந்தப்பமும் இடம்பெற்றன.
