இலங்கை வெள்ள மீட்பு பணிகளுக்கு உடனடியாக உதவுமாறு கனடிய அரசாங்கத்தை கனடிய தமிழர் பேரவை (CTC) வலியுறுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவு வழங்குமாறு கனடிய அரசாங்கம், மனிதாபிமான நிறுவனங்கள், கனடிய பொதுமக்களிடம் CTC வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளை இலங்கை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதுவரை சந்தித்திராத மிக மோசமான வெள்ளங்களில் இது ஒன்று என பேரிடர் கண்காணிப்பு அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
இந்த கடுமையான நிலையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் பேரவையின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனால் எதிர்கொள்ளப்படும் தாக்கத்தை எதிர்கொள்ள சர்வதேச ஆதரவின் அவசரத் தேவையை அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
நம்பகமான சர்வதேச, உள்ளூர் பங்காளிகள் மூலம் விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு கனடிய அரசாங்கத்தை CTC வலியுறுத்துகிறது.
வடக்கு, கிழக்கு உட்பட பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உயிர்காக்கும் நிவாரணங்களை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யவும் கனடிய அரசை CTC வலியுறுத்தியுள்ளது.
இதில் கனடிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாக பேரவை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வெள்ள பேரிடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது பங்கிற்கு அவசர நிவாரண நிதி கோரல் முயற்சி ஒன்றையும் CTC அறிமுகப்படுத்தியுள்ளது.
LJI Reporter ரம்யா சேது
