தமிழ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Markham-Thornhill தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் லயனல் லோகநாதனின் தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்த படுவதாக காவல்துறையில் முறையிடப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபரை Alex Curley என லயனல் லோகநாதன் அடையாள படுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு காவல்துறையினரால் விலங்கிடப்படும் ஒளிப்பதிவு ஒன்றை லயனல் லோகநாதன் வெளியிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலில் Markham- Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளராக தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார்.
தேர்தல் வாக்களிப்புக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் உள்ள நிலையில் லயனல் லோகநாதனின் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்த படுவதாக York பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
Markham- Thornhill தொகுதி முழுவதும் தனது பிரச்சார பதாதைகள் Liberal, NDP கட்சி ஆதரவாளர்களால் சேதப்படுத்த படுவதாக லயனல் லோகநாதன் காவல்துறையில் முறையிட்டார்.
இது போன்ற சம்பவங்களை அவதானித்தால் தமது பிரச்சார அலுவலகத்திக்கு தெரியப்படுத்துமாறு அல்லது காவல்துறையில் முறையிடுமாறு லயனல் லோகநாதன் கோரி இருந்தார்.
இந்த நிலையில் தமது பிரச்சார அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டு, காவல்துறையினருக்கு அறிவித்ததாக லயனல் லோகநாதன் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்துவது அல்லது திருடுவது தேர்தல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும், இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
