இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாக கனடாவின் நீதி அமைச்சரும் சட்டமா அதிபருமான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
மூன்று இலங்கை இராணுவத் தளபதிகள் உட்பட நால்வருக்கு எதிராக பயணத் தடை உட்பட பல தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது.
இவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரித்தானியா இந்தத் தடையை விதித்துள்ளது.
ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் இராணுவத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை அறிவித்த பிரித்தானியா, இலங்கையில் மனித உரிமைகளுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என குறிப்பிட்டது.
இந்த முடிவை வரவேற்றுள்ள அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, இது இலங்கைத்தீவில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றொரு முக்கியமான படியாகும் என தெரிவித்தார்.
January மாதம் 2023 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
தண்டனையிலிருந்து விலக்களிப்பதை முடிவுக்குக் கொண்டு வரவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தவும் கனடா நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றும் எனவும் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி உறுதிப்படுத்தினார்.
