தேசியம்
செய்திகள்

தனிநாட்டை அடையும் எமது முயற்சி சிலரது சதியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது: நிமால் விநாயகமூர்த்தி

கடந்த பதினான்கு வருடங்களாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதில்,  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறிப்பிடக்கூடிய முன் நகர்வை மேற்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி குற்றம் சாட்டினார்.

கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் முன்னெடுத்த ஊடக சந்திப்பில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் நிமால் விநாயகமூர்த்தி, மரியராசா மரியாம்பிள்ளை, எரிக் சேவியர், அனந்தகுமரன் கணபதிப்பிள்ளை, சபா கதிரமலை, சந்திரன் ராமகிருஷ்ணன், ரவீந்திரன் ராஜநாயகம், தயாபரன் சிவசுப்ரமணியம், சான் கிருஸ்ணசாமி, ராம்சங்கர் உதயன், டேவிட் தோமஸ், சிவமோகன் சிவலிங்கம் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட இவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த இந்த சந்திப்பில் சுமார் 120 ஊடகர், பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்த போதிலும் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை என நிமால் விநாயகமூர்த்தி இந்த சந்திப்பில் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர் செய்து, அதன் மூலம் தனிநாட்டை அடையும் எமது இலட்சியத்தை விரைவாக்கும் எமது உன்னதமான முயற்சி, இன்று சிலர் சதியால் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 ஆவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

கனடாவில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன .

இந்த விடயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், ஊடகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

வலுவான காரணங்கள் இல்லாமல் தமது வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டதாக கனடாவில்  வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த சந்திப்பில் தெரிவித்தனர்.

புலம்பெயர் சூழலில் ஒரு பலமான தமிழீழ அமைப்பொன்றை, ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்று கனவு கண்ட அனைவரின் தோல்வி இதுவென நிமால் நிமால் விநாயகமூர்த்தி சுட்டிக்காட்டினார்.

இம்முறை தேர்தல் நியமன விடயத்தில் கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் சுயாதீனமாக இயங்கவில்லை என்பது தெளிவாகிறது என்ற கருத்து இவர்கள் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் கலைக்கப்பட்டு, புதிய ஆணையாளரை நியமித்து, மீண்டும் கனடாவுக்கான தேர்தலை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேர்மையை காக்குமாறு தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரப்பட்டது.

Related posts

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

Lankathas Pathmanathan

நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும்

Gaya Raja

அதிக அளவில் maple syrup உற்பத்தி

Lankathas Pathmanathan

Leave a Comment