ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான Louise Arbour கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக Louise Arbour நியமிக்கப்பட்டார்.
பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை செவ்வாய்க்கிழமை (05) அறிவித்தார்.
July மாதம் பதவி காலம் முடிவடைய உள்ள ஆளுநர் நாயகம் Mary Simon-க்குப் பதிலாக புதிய ஆளுநர் நாயகம் நியமிக்கப்பட்டார்.
Louise Arbour கனடாவின் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராகவும், ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களின் தலைமை வழக்கறிஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
2021-ல் கனடிய இராணுவத்தில் நடந்த பாலியல் முறைகேடுகள் குறித்த ஒரு சுதந்திரமான ஆய்வுக்குத் தலைமை தாங்க அவர் நியமிக்கப்பட்டார்.
அவர் தற்போது தனியார் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராக பதவி வகித்த போது Louise Arbour இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இலங்கையில் தீவிரமடைந்து வந்த மோதல் குறித்து கவலை தெரிவித்து வந்த Louise Arbour, அனைத்து தரப்பினாலும் நிகழ்த்தப்பட்ட யுத்தக் குற்றங்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை எழுப்பினார்.
2007-ல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அவர், சுதந்திரமான கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, யுத்த குற்றங்கள் தனிநபர் குற்றவியல் பொறுப்புக்கு வழிவகுக்க கூடும் எனவும் எச்சரித்தார்.
Quebec மாகாணத்தின் Montreal நகரில் பிறந்த அவர், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
மன்னரின் பிரதிநிதியாக Mary Simon July 2021 முதல் ஆளுநர் நாயகமாக பணியாற்றி வருகிறார்.
இந்தப் பதவியை ஏற்ற முதல் முதற்குடி நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இருப்பினும், அவருக்கு பிரெஞ்சு மொழித் திறமை இல்லாத காரணத்தால் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
புதிய ஆளுநர் நாயகம் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளையும் பேசுபவராக இருப்பார் என கடந்த மாதம் வழங்கிய பேட்டியில் Mark Carney கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
