மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையில் இறுதித் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படுகிறது.
Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவர் மரணமடைந்தனர்.
இவர்கள் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான பரீரன் புவனேந்திரன், முன் இருக்கையில் பயணித்த 52 வயதான ஸ்ரீரதி புவனேந்திரன், பின் இருக்கையில் பயணித்த 23 வயதான நிலுஷ்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
2022-இல் நிகழ்ந்த இந்த விபத்துக்கான நீதித்துறை விசாரணை Newmarket நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
March 2 ஆரம்பித்த இந்த வழக்கு விசாரணை March 9 முடிவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த வாரம் வெள்ளிக்கிழமை (17) வழங்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் தமிழர்களை நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு தனது குடும்பத்தை இழந்த பூபலசிங்கம் புவனேந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போதும் தமிழர்கள் சிலர் அங்கு நேரடியாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.
