உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய வான்வழித் தாக்குதல்களை கனடிய பிரதமர் கண்டித்தார்.
சனிக்கிழமை (27) உக்ரைனின் தலைநகரை ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்கியதில் குறைந்தது ஒருவர் பலியானார் – 27 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் உக்ரைனுக்கான மேலதிக பொருளாதார உதவிகளை கனடிய பிரதமர் Mark Carney அறிவித்தார்.
இந்த வார விடுமுறை தாக்குதல் உக்ரைனுடன் ஆதரவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக Mark Carney கூறினார்.
அதேவேளை உக்ரைன் ஜனாதிபதியை கனடிய பிரதமர் கனடாவுக்கு வரவேற்றார்.
இந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியுடன் திட்டமிடப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லும் வழியில் Volodymyr Zelenskyy கனடிய பிரதமரை Nova Scotia மாகாணத்தில் சந்தித்தார்.
Halifax விமான நிலையத்தில் உக்ரைன் ஜனாதிபதியுடன் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய Mark Carney, உக்ரைனுக்கு கனடா மேலும் $2.5 பில்லியன் பொருளாதார உதவியை வழங்கும் என கூறினார்.
இந்த உதவியின் மூலம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட ஏனைய அமைப்புகளிடம் இருந்து மறு கட்டமைப்புக்கான நிதியுதவியை பெற வழி உள்ளது என Mark Carney நம்பிக்கை தெரிவித்தார்.
கனடாவின் தொடர் ஆதரவுக்கு Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார்.
2022 முதல் கனடா உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளுடன் $6.5 பில்லியன் இராணுவ உதவியையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
