தமிழர் ஒருவருக்கு எதிராக York பிராந்திய காவல்துறை பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
York பிராந்திய காவல்துறை புலனாய்வாளர்கள் தமிழரான ஒரு மதத் தலைவருக்கு எதிராக ஏழு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
ஆன்மீக கல்வி அமர்வுகளின் போது நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மதத் தலைவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறை புலனாய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
Toronto நகரைச் சேர்ந்த 44 வயதான பிரவீன் ராணிஜன் என்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்த சந்தேக நபர் Pickering நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மத ஆய்வு வகுப்புகளை முன்னெடுத்து வந்ததாக தெரியவருகிறது.
January 2021 முதல் October 2024 வரையிலான காலப்பகுதியில் ஆன்மீக கல்வி அமர்வுகளில் சந்தேக நபரால் ஒருவர் ஆறு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் Pickering, Markham நகரங்களில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.
இரண்டாவது நபர் ஒருவரும் 2024 December-ரில் சந்தேக நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள புலனாய்வாளர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
