தமிழினப் படுகொலையின் சாட்சியமாக அமைந்துள்ள “போரின் சாட்சியம்” Toronto நூல் அறிமுகம் August மாதம் 30-ஆம் திகதி நடைபெற்றது.
ஈழநாதம் பத்திரிகையின் போர்க்கள நிருபராகவும், படப்பிடிப்பாளருமாக April 2009 வரை பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் இறுதிப் போர் குறித்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் ஊடகவியலாளராக செயலாற்றிய சுரேன் கார்த்திகேசு போரின் கொடூரங்கள் குறித்த தனது சாட்சியப் பதிவாக இந்த நூலை அமைத்துள்ளார்.
இந்த நூலில் இடம்பெற்ற 80 சதவீதமான புகைப்படங்களை சுரேன் கார்த்திகேசு எடுத்துள்ளார். இறுதி யுத்தத்தின் அவலங்களை தனது புகைப்படங்கள், விளக்கக் குறிப்புக்கள் எனத் தொகுத்து தமிழினப் படுகொலைக்கான ஒரு சாட்சி ஆவணமாக இந்த நூலை அவர் வடிவமைத்துள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் தேசியம் சஞ்சிகை “போரின் சாட்சியம்” நூலின் Toronto அறிமுக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தேசியம் சார்பில் தலைமை தாங்கி இலங்கதாஸ் பத்மநாதன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.
சிறப்பு பேச்சாளர்களாக சட்டவியலாளர் சரிகா நவநாதன், திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப், ஊடகர் உதயன் S. பிள்ளை, எழுத்தாளர் பா.அ.ஜயகரன் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நூலை வைரமுத்து சொர்ணலிங்கம் வெளியிட்டு வைத்தார். சிறப்புப் பிரதிகளை நிமால் விநாயகமூர்த்தி, சாந்தா பஞ்சலிங்கம், இளங்கீரன் ஆகியோர் பெற்றனர்.



Vancouver நகரில் வாழ்ந்து வரும் நூல் ஆசிரியர் சுரேன் கார்த்திகேசு, 2010-ஆம் ஆண்டு Sun Sea கப்பலில் 492 பேருடன் அகதியாக கனடா வந்தடைந்தவர்.
இவரது அகதிக் கோரிக்கை தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
