Scarborough Piper Arms மதுபான விடுதியில் துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களும் Toronto காவல்துறையினரால் தேடப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை பின்னிரவு 10:40 மணியளவில் Scarborough Town Centre பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட Piper Arms மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.
மதுபான விடுதிக்குள் நுழைந்த 3 சந்தேக நபர்கள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை “நம்பமுடியாத வன்முறைச் செயல்” என Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw வர்ணித்தார்.
இதில் ஆறு பேருக்கு கை, கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரியவருகிறது.
இதில் காயமடைந்தவர்களில் மூவர் தமிழர்கள் எனவும் தெரியவருகிறது.
இந்த மதுபான விடுதி தமிழர்களுக்கு சொந்தமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் துப்பாக்கி சூடு “ஒரு இலக்கு வைக்கப்பட்ட சம்பவத்தின்” அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது என குற்ற ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது இலக்கு வைக்கப்பட்ட குற்றமா என்பது குறித்து Toronto காவல்துறையினர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து “ஆழ்ந்த கவலை” அடைந்ததாக Toronto நகர முதல்வர் Olivia Chow கூறினார்.
இதனை ஒரு “மிகவும் சோகமான தருணம்” என Scarborough Centre நகர சபை உறுப்பினர் Michael Thompson விவரித்தார்.
தனது சமூகத்திற்கு இதுபோன்ற ஒரு சம்பவம் முன்னர் எப்போது நடந்ததில்லை எனவும் அவர் கூறினார்.