33 ஆயிரம் வரையிலான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை விரைவு படுத்தப்படுகிறது.
கிராமப்புற, தொலைதூர சமூகங்களில் வசிக்கும் 33 ஆயிரம் வரையிலான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தற்போது நிரந்தரக் குடியுரிமைக்கான விரைவான மாற்றத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறை இந்த முடிவை அறிவித்தது.
இந்தப் புதிய குடியிருப்பாளர்கள், விவசாயம் போன்ற முக்கியப் பொருளாதாரத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்கனவே பூர்த்தி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒருமுறை முன்னெடுப்பின் கீழ், 2026, 2027-க்கு இடையில் 33 ஆயிரம் வரையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிரந்தர வசிப்பிட விண்ணப்பங்கள் விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குடிவரவுத் துறையின்படி, 2026-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் நிரந்தர குடியுரிமைக்கு மாற்றப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் 2027-ஆம் ஆண்டில் மாற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது.
கடந்த November மாத வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முதன்முதலில் குறிப்பிடப்பட்ட “கனடா தொழிலாளர் முன்முயற்சி” (In-Canada Workers Initiative), திங்கட்கிழமை (04) முறைப்படி வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இதுவரை 3,600 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
“இந்த முன்முயற்சியானது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழிலாளர் பற்றாக்குறை மிகவும் அவசியமாக உணரப்படும் முக்கியத் துறைகளில் அப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என குடிவரவுத்துறை அமைச்சர் Lena Metlege Diab ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
