தேசியம்
செய்திகள்

கனடிய முதற் குடியினர் போப்பாண்டவருடன் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசுடன் கனடிய முதற் குடி இனத்தவர்கள் வியாழக்கிழமை (31) வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு ஒரு புதிய கூட்டுறவின் ஆரம்பம் என கனடிய முதற்குடி குழுக்களின் தலைவர்கள் கூறினர் .

இந்த வத்திக்கான் சந்திப்பு, நல்லிணக்கத்தை நோக்கி செயல்படும் பழங்குடி குழுக்களுக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையே ஒரு புதிய கூட்டுறவின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக முதற்குடி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் Gerald Antoine தெரிவித்தார்.

வியாழனன்று போப் பிரான்சிசை முதற்குடி பிரதிநிதிகள், வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் சந்தித்தனர்.

போப்பாண்டவருடனான சந்திப்பை “வரலாற்று மைல்கல்” என Antoine வர்ணித்தார்.

கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கான திட்டங்களின் பார்வையைப் பகிர்ந்து கொள்வதற்கும் முதற் குடியின குழுக்களுக்கும் தேவாலயத்திற்கும் இடையே தொடர்ந்து உரையாடல் நடைபெறும் என இந்த சந்திப்பின் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூதுக்குழுவுடன் ஒரு மணிநேரம் மட்டுமே போப்பாண்டவர் சந்திக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இந்த சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பின் போது, போப் பிரான்சிஸ் கனடாவுக்கு வருவதற்கோ அல்லது முறையான மன்னிப்பு கேட்பதற்கோ உறுதியளிக்கவில்லை.

Inuit, Métis பிரதிநிதிகள் கடந்த திங்களன்று வத்திக்கானில் திருத்தந்தையை சந்தித்தனர்.

இந்த சந்திப்பிலும் போப்பாண்டவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

மீண்டும் வெள்ளிக்கிழமை போப் பிரான்சிஸ் இந்த பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாளைய சந்திப்பில் தேவாலயத்தின் அடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்களுக்காக முதற்குடி, Inuit, Metis சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 32 பிரதிநிதிகள், குடும்ப உறுப்பினர்கள் என ஒரு குழுவினர் கனடாவில் இருந்து ரோம் பயணமாகினர்.

பல பழங்குடியினர் கனடிய மண்ணில் போப்பாண்டவர் மன்னிப்பு கோருவார் என எதிர்பார்க்கின்றனர்.

முன்னர் போப் பிரான்சிஸ் கனடாவுக்குப் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.

Related posts

நேபாளத்தில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

Lankathas Pathmanathan

Leave a Comment