தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

Toronto பொது நூலகமும் தமிழும்!

Toronto பொது நூலகங்கள் சிலவற்றில் இருந்து தமிழ் நூல்கள் அகற்றப்படுகின்றன என்ற தகவல் இந்த (February) மாதத்தின் ஆரம்பத்தில் Toronto தமிழர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானது. தமிழ் நூல்கள் இருந்த அனைத்து நூலகங்களிலும் இருந்தும் புத்தகங்கள் அகற்றப்படுகின்றனவா, அவ்வாறாயின் ஏன் என்ற கேள்வி முதலில் வாசிப்பு ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.

இந்த விடயம் குறித்து Toronto பொது நூலகத்தின் தலைமை நூலகர் Vickery Bowles விளக்கம் ஒன்றை வழங்கினார். தமிழ் நூல்களை தொடர்ந்தும் பராமரிப்பது மட்டுமல்லாமல் புதிய நூல்களின் கொள்வனவையும் தாம் தொடர்வதாக அவர் தெரிவித்திருந்தார். இது வரை காலமும் 24 Toronto பொது நூலகங்களில் தமிழ் நூல்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை 20ஆக குறைக்கப்படுகின்றது என்ற தகவலையும் பொது நூலகத்தின் தலைமை நூலகர் வெளியிட்டார்.

2010 ஆம் ஆண்டில் Toronto பொது நூலகங்களில் தமிழ் நூல்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அரைவாசியே 2015 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக ஒரு தரவு உள்ளது. இதற்கான காரணம் தமிழர்களின் நூலக பாவனையில் ஏற்பட்ட வீழ்ச் சிஎனலாம். தமிழர்கள் பலர் Torontoவில் இருந்து புற நகர் பகுதிகளுக்கு இடம் பெயர்வதால் மாத்திரம் இது ஏற்படுவதல்ல. Toronto நகரில் தொடந்து வசிப்பவர்களின் வாசிப்பு முறைகளில் ஏற்படும் மாற்றமும் இதற்கான காரணியாகும். மேலும் நூலகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி பற்றாக் குறைவால், தமிழ் நூல்கள் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். கடந்த வருடம் Doug Ford அரசாங்கத்தால் Ontario நூலக சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு பாதியாக குறைக்கப்பட்டது. இந்த நிதி குறைப்பு Toronto பொது நூலகத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். Toronto மாநகரத்துக்கான ஆதன வரி தமிழர்களாலும் கட்டப்படுகின்றது. இந்த ஆதனவரியின் ஒரு பகுதி நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இந்த நிலையில் எண்ணிக்கை குறைப்பு குறித்து தமிழர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துதல் அவசியம். தமிழ் மக்களுக்கு அதற்கான அனைத்து உரிமையும் உண்டு.

தவிரவும் பலரும் கவனிக்கத் தவறும் ஒரு விடயமும் உள்ளது. அது தமிழ் நூல்களின் கொள்வனவு முறையாகும். Toronto பொது நூலகத்திற்கு கொள்வனவு செய்யப்படும் நூல்கள் பாவனையாளர்களின் தேவை அல்லது விருப்பங்களின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கனடிய தமிழர்களின் தேவைகளுக்கு மாறான பல நூல்கள் இன்றும் கொள்வனவு செய்யப்படுகின்றன. கனடிய தமிழ் எழுத்தாளர்கள் பலரது நூல்கள் Toronto பொது நூலகத்தில் இருப்பதில்லை. தமது நூல்களை Toronto பொது நூலகத்திடம் கையளிக்க முனைந்த பல உள்ளூர் எழுத்தாளர்களுக்கு தகுந்த பதில் இல்லை.

பொது நூலகங்களில் தமிழ் நூல்களை தக்கவைத்துக் கொள்வதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். இந்த இடத்தில் தான் எமக்கான ஒரு நூலகம் வேண்டும் என்ற நீண்ட கால குரல் மீண்டும் ஒலிக்க ஆரம்பிக்கின்றது. ஏற்கனவே தமிர்களிடம் இரண்டு நூலகங்கள் Torontoவில் இருந்தன. ஒன்று எரிக்கப்பட்டு விட்டது. மற்றையது இருந்த இடமே இல்லாமல் உள்ளது. அங்கிருந்த நூல்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

இந்தப் பூனையின் கழுத்தில் மணிகட்டப் போவது யார்?

இலங்கதாஸ்பத்மநாதன்

Related posts

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

கொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல!

Lankathas Pathmanathan

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Gaya Raja

Leave a Comment