Scarborough மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பின்னிரவு 10:40 மணியளவில் Scarborough Town Centre பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட Piper Arms மதுபான விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மதுபான விடுதிக்குள் நுழைந்த 3 சந்தேக நபர்கள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முகமூடி அணிந்த மூன்று ஆண் சந்தேக நபர்களால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது என Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் ஒருவர் தாக்குதல் துப்பாக்கி, ஏனைய இருவர் கை துப்பாக்கிகளுடன் இந்த தாக்குதலை முன்னெடுத்தனர்.
இதில் காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவருகிறது.
காயமடைந்தவர்களில் ஆறு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர்.
ஏனையவர்கள் உடைந்த கண்ணாடிகளால் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என காவல்துறை அதிகாரி ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற அமுலாக்க அதிகாரிகளின் கண்காணிப்பாளர் Paul MacIntyre தெரிவித்தார்.
இதில் சந்தேக நபர்கள் தொடர்பில் எந்தவித தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் குறித்து “ஆழ்ந்த கவலை” அடைந்ததாக Toronto நகர முதல்வர் Olivia Chow கூறினார்.