சீனாவில் கொரோனா வைரஸினால் தனிமைப்படுத்தப்பட்ட ஹூபேயின் பகுதியில் இருந்து மீண்டும் கனடா திரும்ப விரும்பிய கனடியர்கள் அனைவரும் இன்றுடன் (செய்வாய்) கனடா திருப்பியுள்ளனர். கனடிய அரசாங்கத்தின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடியர்களுடன் இரண்டாவது கனடிய விமானம் தெற்கு ஒன்ராறியோவில் உள்ள ட்ரெண்டோன் கனடிய படைகள் தளத்தில் இன்று (செய்வாய்) தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் 185 பயணிகளுடன் வுஹானில் இருந்து புறப்பட்டதாக கனடிய வெளியுறவு அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப்ஷாம் பெயின் தெரிவித்தார். இந்த விமானத்தில் பயணமாக 236 கனடியர்கள் தயாராக இருந்ததாக சீனாவில் உள்ள கனடிய அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக் கிழமை கனடாவை வந்தடைந்த முதலாவது விமானத்தில் 176 பேரும் அதனைத் தொடர்ந்து அமெரிக்க விமானம் ஒன்றில் கனடியர்கள் 37 பேரும் கனடாவை வந்தடைந்துள்ளனர். இந்த மூன்று விமானங்களில் பயணம் மேற் கொண்ட அனைவரும் ட்ரெண்டோன் கனடிய படைகள் தளத்தில் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து குறைந்த அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார். கனடாவில் கொரோனா வைரஸினால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நால்வர் British Columbia மாகாணத்திலும் மூவர் Ontario மாகாணத்திலும் உள்ளதாகவும் கனடாவின் பொது சுகாதார அமையம் கூறியுள்ளது.
இறுதியாக கிடைக்கப்பட்டுள்ள தகவலின் பிரகாரம் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 42,638 பேர் (உலகளவில் 43,000க்கும் அதிகமானவர்கள்) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,016 பேர் இந்த வைரஸினால் பலியாகியுள்ளனர்.